இலங்கையின் அரச படையினர் போன்ற சீருடை அணிந்தவர்கள், கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட சிலரை சுட்டுக்கொல்வதுபோல சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த காணொளி காட்சி உண்மையானவைதான் என ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் என்னும் அமைப்பினாலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் காட்சி முதலில் அனைவருக்கும் அனுப்பட்டிருந்தது.ஆரம்பம் முதலே இலங்கை அரசாங்கத் தரப்பினர் இந்த வீடியோ போலியானது என்று கூறிவருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்த ஐ.நா.வின் சிறப்பு நிபுணர்கள், இந்த வீடியோ குறித்த அனைத்து சந்தேகங்களையும் களைந்துவிட்டதாக சட்டத்துக்கு புறம்பான, எதேச்சதிகார மற்றும் விசாரணையற்ற கொலைகள் குறித்த ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் இந்த வீடியோ குறித்து ஆராயுமாறு நியமிக்கப்பட்ட குழுவின் முடிவுகளில் குறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டனவா என்பது குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் சிறப்புத் தூதர் தெரிவித்துள்ளார்.